தென்மேற்கு கொலம்பியாவில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிறைக்குத் தீவைக்கப்பட்டதில் தீயில் சிக்கி குறைந்தது 52 கைதிகள் பலியாகினர். மேலும் 26 பேர் காயமடைந்தனர் என கொலம்பியா தேசிய சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துலுவா நகரில் உள்ள சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அதிகாலை 2:00 மணியளவில் கைதிகள் மெத்தைகளுக்குத் தீ வைத்தனர் என தேசிய சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை நிறுவனத்தின் (INPEC) பணிப்பாளர் டிட்டோ காஸ்டெல்லானோஸ் கூறினார்.
தீயில் கருகி 52 பேர் உயரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேருக்கு நாங்கள் சிகிச்சையளித்து வருகிறோம் என வாலே டெல் காகா Valle del Caucaவில் உள்ள சுகாதாரத் துறையின் தலைவர் கிறிஸ்டினா லெஸ்மெஸ் (Cristina Lesmes) ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களின் 6 சிறைக்காவலர்கள் உட்பட பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கலவரம், தீவைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
மெத்தைகளை எரிப்பதன் மூலம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை கைதிகள் கணிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த கலவரம் மற்றும் தீவைப்பால் 52 பேர் பலியானதுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர் என தேசிய சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை நிறுவனத்தின் பணிப்பாளர் டிட்டோ காஸ்டெல்லானோஸ் கூறினார்.
தீப்பரவலை அடுத்து சிறைச்சாலைக்கு விரைந்த தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை தடயவியல் குழுக்கள் சிறைக்குள்சென்று தீயில் கருகி இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முயன்றனர்.
சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கான சிறைக் கைதிகளின் குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களை பற்றிய தகவல்களை அறிய நேற்று முழுவதும் காத்திருந்தனர்.
ஒரு கட்டடத்தில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் முதலில் மெத்தைகளை எரித்திருக்கலாம். இதனைத் தொடர்ந்து அந்த வளாகம் முழுவதும் தீ பரவி இருக்கலாம் என என முதற்கட்ட விசாரணைகளை தொடர்ந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து விசாரணைகளின் பின்னரே கருத்து வெளியிட முடியும் என கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.